ரஜினி ரசிகர் தற்கொலை! 0

TamilN Networks | Saturday, October 09, 2010 |

கோவை: ‘எந்திரன்’ படத்துக்கு செல்ல முடியாததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். கோவை சரவணம்பட்டி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (25). மனைவி பிரீதா (20). இருவரும் காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் சென்ட்ரிங் வேலைக்கு செல்கின்றனர். தீவிர ரஜினி ரசிகரான வினோத்குமார், ‘எந்திரன்’ படத்தை பார்க்க ஆவலாக இருந்தார். நேற்று முன்தினம் மனைவியிடம் சென்று ‘‘தலைவர் ரஜினியின் எந்திரன் படம் ரொம்ப பிரமாண்டமாக இருக்கிறதாம். ரஜினி சூப்பரா நடிச்சிருக்காராம்.

படம் பார்த்தவங்க எல்லாரும் பெருமையா சொல்றாங்க. நாமும் படத்துக்கு போகலாம்’’ என அழைத்துள்ளார். அதற்கு பிரீதா, ‘‘எல்லா தியேட்டர்லயும் ‘எந்திரன்’ படத்துக்கு கூட்டம் அலைமோதுது. ஒரு வாரம் கழித்து போகலாம்’’ என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று மதியம் இருவருமே சாப்பிடாமல் இருந்துள்ளனர். படம் பார்க்க செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த வினோத்குமார், மாலையில் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதைப் பார்த்து பிரீதா கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வினோத்குமாரை மீட்டு சரவணம்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவிக்கு பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வினோத்குமாரின் அப்பா சாமிநாதன் கூறுகையில், ‘‘என் மகனுக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே தீவிர ரஜினி ரசிகன். ‘எந்திரன்’ படத்தை முதல் நாளிலேயே பார்த்துடணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். படம் பார்த்துவிட்டு வந்தவங்க பிரமாதம்னு சொன்னத கேட்டதும் அவனால வீட்ல இருக்க முடியல. எப்படியாவது படத்தை பார்த்துடணும்னு துடிச்சான். மனைவி தாமதிச்சுட்டே வந்ததால அவனால் பொறுக்க முடியாம இப்படி ஒரு முடிவுக்கு போயிட்டான்’’ என்றார்.

0 Responses So Far: